தேசிய தொழில்நுட்ப கழகம் செப்டம்பர் 2021
முதலிடத்தை தக்க வைத்து, தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்திய அரசின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு அமைப்பு ( என்.ஐ.ஆர்.எஃப்) வெளியிடும் “இந்திய தரவரிசை 2021″இல் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி ( என் ஐ டி திருச்சி) தொடர்ச்சியாக ஆறாவது வருடமாக மற்ற அனைத்து தேசிய தொழில்நுட்பக் கழகங்களுள் முதலிடத்தைத் தக்க வைக்கிறது.
இந்திய பொறியியல் கல்லூரிகளுள் ஒன்பதாம் இடத்தைத் தக்க வைப்பதுடன், இவ்வருடத்தில் மொத்த மதிப்பெண்ணாக 66.08 பெற்று, சென்ற வருடத்தின் மதிப்பெண்ணான 64.10 விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைக் காரணிகளில், விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் வெளியீடுகளின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் காப்புரிமைகளை பதிவு செய்தல் போன்றவற்றுக்குக் கல்லூரி தரப்பில் இருந்து தரப்பட்ட ஊக்கம் உத்வேகமாக இருந்தது. புதிய திட்டங்கள் சமர்பித்தல் மற்றும் மானியங்கள் பெறுதல், ஆலோசனை மற்றும் கல்வித் திட்டங்களை தொடர்ந்தது வலு சேர்த்தன.
பட்டப்படிப்பு விளைவுகளில், வேலை வாய்ப்புகளும், பட்டதாரிகளின் சராசரி சம்பளமும் அதிகரித்துள்ளன மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
முதல் எட்டு இடங்களில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி) உள்ள நிலையில் , பல ஐ.ஐ.டி கள், சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பின்னுக்குத் தள்ளி, அனைத்து இந்தியப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒன்பதாம் இடம் என்ற மிகச் சிறப்பான சாதனையினை என்.ஐ.டி திருச்சி செய்துள்ளது.
தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் கடிகார கோபுரம் இரவு மின்னொளியில்.
ஒட்டுமொத்த தரவரிசையில் 24 இல் இருந்து 23 க்கு முன்னேறி, இந்தியாவின் முதல் 25 கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது.
என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் , தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளதற்காக பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் தொடர்ந்த ஆதரவுக்காகவும் பங்களிப்புக்காகவும் வாழ்த்தினார்.
என்.ஐ.டி திருச்சி கடந்த மூன்று வருடங்களில் தரவரிசையில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது மிகச் சிறப்பான சாதனை எனச் சுட்டிக்காட்டினார்.
என்.ஐ.டி திருச்சி வரும் வருடங்களில் மேன்மேலும் உயர் நிலை அடைவதற்காக , வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்துவதற்கு, முனைவர் பட்டப் படிப்புகளுக்கு, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்கு, திட்டங்கள் மற்றும் ஆலோசனை மேம்பாட்டிற்கு தொடர்ந்து உழைக்க பேராசிரியர்களை ஊக்குவிப்பதாகக் கூறினார்.
குறிப்பாக தரவரிசைக்கான தரவுகளைத் தொகுத்த, என்.ஐ.ஆர்.எப் தரவுக்குழுவுக்குத் தம் நன்றிகளைத் தெரிவித்தார்.