2 வருடங்களுக்கு மேலாக திருச்சி 55 வார்டு திமுக கவுன்சிலர் ராமதாசுக்கு தண்ணி காட்டும் திமுக மேயர் அன்பழகன் . இன்று பொதுமக்களுடன் மாநகராட்சி முற்றுகை .
திருச்சி 55 வது வார்டு திமுக கவுன்சிலர் வெ.ராமதாஸ் இன்று தனது வார்டு பொதுமக்களுடன் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்தார் . ஆணையர் மற்றும் மேயர் இல்லாததால் நெடுநேரம் காத்திருந்த பின்பு துணை ஆணையர் அஜிதா பேகத்திடம் அந்த மனுவை பொதுமக்களுடன் இணைந்து அளித்து சென்றார்.அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினையை பலமுறை எடுத்து கூறியும், முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஒரே பதிலையே மேயர் அன்பழகன் அவர்களும், மாநகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் 24 x 7 குடிநீர் வழங்கல் திட்டம் மூலமாக சரியாகிவிடும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஜீயபுரம் பம்பிங் மூலமாக வழங்கப்படும் குடிநீர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் முறையாக வழங்கப்படுகிறது.
கடந்த 2006-2011 காலகட்டத்தில் துவங்கப்பட்ட ஜெயநகர் வாட்டர் டேங்கிலிருந்து இன்று வரை அதே அளவு குடிநீர்தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் இணைப்புகள் அன்றைக்கு இருந்ததைவிட மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தார் போல் வழங்கும் நீரின் அளவை உயர்த்தி தராததால், மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக சாலைகள் சிறு மழை பெய்தாலே நடப்பதற்கு கூட தகுதியற்ற சாலைகளாக மாறிவிடுகின்றது.மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. மேலும், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆணையர் அவர்களிடமும் நேரில் வலியுறுத்தியும், வாட்ஸ்அப் மூலமாக நிலைமையை படம் பிடித்து அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
பிராட்டியூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் காலதாமதமாக (ஆமை வேகத்தில்) நடைபெற்று வருவதால், அந்த தெருக்களில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். விரைந்து பணிகளை முடித்து மக்களை சிரமங்களிலிருந்து விடுவித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், பொறியாளர் நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த பொறியாளர் அலுவலக உதவியாளர் (OA) (ராதாகிருஷ்ணன் ) கடந்த 3-மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். அவருடன் பணியாற்றிய மற்றொரு பணியாளரான (சண்முகம் அவர்களையும்) வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதலால் எங்களது வார்டுக்கு பணியாளர் யாரும் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம்.
எனவே, எங்களது வார்டுக்கு ஏற்கனவே எங்களது வார்டைப்பற்றி நன்கு அறிந்தவரை பொறியாளர் அலுவலக உதவியாளர் (OA) பணிநியமனம் செய்து தாருங்கள். இல்லையென்றால் உடனடியாக புதிய பொறியாளர் அலுவலக உதவியாளர் (OA) பணியாளரை நியமனம் செய்து தாருங்கள் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோ அபிஷேகபுரம் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணனும் பங்கேற்றார் …
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கவுன்சிலர் ராமதாஸ் பேசும் போது 55 வது வார்டு பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம்,பொதுமக்களின் சிரமத்தை உடனடியாக போக்கிட வேண்டும். இதன் பின்னும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்வார்டு பொதுமக்கள் அனைவரையும் திரட்டி திருச்சி மாநகராட்சியைமுற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்
திங்கள் கிழமை தோறும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களிடமிருந்து குறைகள் குறித்த மனுக்களை பெறுவது வழக்கம் ஆனால் இன்று பொதுமக்களோட கவுன்சிலர் முத்துவை விட வருகிறார் என்பதை அறிந்து மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் இருவரும் மாநகராட்சி அலுவலகம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

