பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு தெரு மண் தொழிலாளர் முதல் வீதியில் தனியாக வசித்து வந்தவர் தங்கம்மாள் (வயது 74). இவர் வீட்டில் நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் புகுந்து, வீட்டிலிருந்த பித்தளை பாத்திரங்கள், அண்டா உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதை பார்த்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரை அழைக்க சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இருவரும் மூதாட்டியின் வாயை பொத்தி, கழுத்தை நெரித்து தாக்கினர். தொடர்ந்து குடிபோதையில் இருந்த அவர்கள் மூதாட்டி தங்கம்மாளை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் பாத்திரங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த நிலையில் இருந்த தங்கம்மாளை பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்ததில் பவானி மண் தொழிலாளர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த ஹரிகுமார் (வயது 22), அதே பகுதியைச் சேர்ந்த கிரி என்கிற கண்ணன் (வயது 23) இருவரும் தங்கமாளை தாக்கி கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதும், பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் குறித்து தங்கம்மாளின் மகன் முருகன் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஹரிகுமார் மற்றும் கிரி ஆகியோரை கைது செய்தனர். குடிபோதையில் வாலிபர்கள் இருவர் வீடுபுகுந்து மூதாட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் பவானியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

