திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு

திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மே 1- ந் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்றாலும் வழக்கம் போல் சரவணன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சரவணன் கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த செவிலியர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

