நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.
அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.26-ம் தேதி (நேற்று) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று என்டிஏ அறிவிருத்திருந்தது. ஆனால், அறிவித்தபடி நேற்று ஹால் டிக்கெட் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில், ‘நிர்வாகக் காரணங்களால் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று ஏப்ரல் .26-ம் தேதி வெளியாகவில்லை. இன்று திங்கள்கிழனம (27-ம் தேதி ) முதல் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

