புதுச்சேரி ராஜா தெருவில் உள்ள விடுதி மேலாளர் ராமசாமி என்பவரிடம், “டாக்டர் விக்னேஷ்” என அறிமுகமான நபர் சமீபத்தில் கைவரிசை காட்டிய விஷயம்தான் இப்போது அந்த மாநிலம் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது.

“திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்கினால் ரூ. 25 லட்சம் சம்பளம் மற்றும் ரூ. 2 லட்சம் முன்பணம் வழங்கப்படும்” என ஆசை வார்த்தை கூறி இந்த மோசடி நடந்துள்ளது.
இதை நம்பிய ராமசாமி, ‘பதிவு கட்டணம்’ என்ற பெயரில் ரூ. 49,500 பணத்தை மர்ம நபரின் QR கோடிற்கு அனுப்பியுள்ளார். மீதி ரூ. 500-க்கு விடுதி உரிமையாளரிடம் உதவி கேட்டபோது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. உரிமையாளர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி லாட்ஜ் மேலாளரை ஏமாற்றிய கும்பல், வெறும் பணத்தை மட்டும் ஆசையாகக் காட்டாமல், மிகத் தந்திரமான “உளவியல் ரீதியான” பொய்களைக் கூறி அவரை நம்ப வைத்துள்ளது.
அந்த மர்ம நபர் பேசும்போது, “செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு வரும் பல பெண்களுக்கு கணவர்களால் குழந்தை பாக்கியம் இருக்காது. செயற்கை முறையை விட இயற்கையான உறவு மூலம் கருத்தரிப்பதையே அந்தப் பெண்களும் அவர்களது கணவர்களும் விரும்புகிறார்கள். இயற்கை முறையில் பிறக்கும் குழந்தையே ஆரோக்கியமானது என்று நினைத்து கணவர்களும் சம்மதித்து உடல் உறவு வைக்க அனுமதிக்கிறார்கள். இது கணவனின் சம்மதத்துடன் தான் நடக்கிறது. உங்களை மாதிரி திடகாத்திரமான வாலிபர்களைத்தான் மனைவியுடன் சேர விடுவார்கள். கணவர்களும் மூடிய அறைக்குள் உங்கள் இருவர் கூடவும் இருப்பார்கள்” என்று கூறி, இதில் சட்டவிரோதம் எதுவுமில்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இது முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும், யாருக்கும் சந்தேகம் வராது” எனக்கூறி ராமசாமியின் தயக்கத்தை உடைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ராமசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“ரகசிய வேலை, டோனர் வேலை எனக்கூறி முன்பணம் கேட்கும் 99.9% அழைப்புகள் மோசடியே. மக்கள் பேராசைப்பட்டு பணத்தை இழக்க வேண்டாம்” என காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து உள்ளனர். பணத்தாசையால் ஏமாந்த மேலாளர் இப்போது போலீஸ் நிலையத்தில் கண்ணீருடன் உள்ளார்.

