திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது .
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.இதில் ,துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் மணப்பாறை மாட்டு சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் தாலுகா, ராம்ஜி நகர், காட்டூர் பகுதியைச் சேர்ந்த பானுமதி (வயது 66) என்பவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புகையிலை பொருட்கள்:
இதேபோல், திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் கக்கன் காலனி பகுதியில் சோதனை நடத்தியபோது, வீட்டின் முன்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்த வித்யா (வயது 37) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், உப்பிலியபுரம் போலீசார் சோபனபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கலையரசி (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட இரு பெண்கள் மீதும் கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

