வெற்று பட்ஜெட் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
காகித பட்ஜெட் என குற்றச்சாட்டு:
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பரபரப்பு புகார்.
திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மேயர் அன்பழகன் தலைமையில்,ஆணையர் மதுபாலன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,மண்டல குழு தலைவர்கள்,கவுன்சிலர்கள்,அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி நிதி குழு தலைவர் கவுன்சிலர் முத்துச்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலை எதிர்த்து திருச்சி மாநகராட்சிஅதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,திருச்சி மாநகராட்சி அதிமுக கொறடா கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன் ஆகியோர் கூறும் போது, கடந்த பட்ஜெட்டில் காந்தி மார்க்கெட் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி ரூபாய் 60 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காவிரி ஆற்றின் தென்கரை பகுதியில் அழகுபடுத்தும் படி ரூபாய் 15 கோடியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. அதேபோன்று
திருச்சி மாநகராட்சி மையக் கட்டிடம் 50 ஆண்டுகள் பழமையானது. புதிதாக ரூபாய் 50 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. தற்போது ரூபாய் 75 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்கள் .இதுவும் நடைமுறைக்கு வருமா? என்று தெரியவில்லை. அதேபோன்று கடந்த பட்ஜெட்டில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க ரூபாய் 110 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மாநகராட்சியின் வரி வருவாய் மொத்த நிதியையும் பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிக்கு செலவழித்து வருகின்றனர். காந்தி மார்க்கெட்டை மேம்படுத்தாமல் பஞ்சப்பூரில் புதிதாக காய்கறி மார்க்கெட்டை தேவையில்லாமல் கட்டி வருகின்றனர்.
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. உயர்மட்ட பாலங்கள் கட்டுவதாக அறிவித்து அதுவும் செயல்படுத்தப்படவில்லை. மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து எந்த தகவலும் இல்லை. 
இந்த பட்ஜெட் வெறும் காகித பட்ஜெட் என்று குற்றம் சாட்டி மாமன்ற கூட்டத்தில் இருந்து பாதியிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

