வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று சோஷியல் மீடியாவில் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
கொல்லிமலை சித்தர் நேற்றைய தினம் குடியாத்தம் கோயிலுக்கு வந்திருந்து, அங்கு செய்த செயல், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நிறைய சித்தர்கள் வாழ்கிறார்கள். இது பழமையான ஆன்மிக மலைப்பகுதியாகும்.. இயற்கை அமைதியும் தனிமையும் ஆன்மிக பயிற்சிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
இங்குள்ள சித்தர்கள் பெரும்பாலும் ஆயுர்வேத சிகிச்சை, மந்திரங்கள், யோகம், ஜோதிடம் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் மலைக்கு சென்று தனிமையில் வாழ்கிறார்கள், சிலர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம், அருள்வாக்கு சொல்கிறார்கள்.. எனவேதான், கொல்லிமலை மிகவும் பிரபலமான ஆன்மீக மையமாக திகழ்ந்து வருகிறது. .
இந்த கொல்லிமலையில் மிளகாய் பொடி சித்தர் என்ற பெயரில் ஒரு சித்தர் வாழ்ந்து வருகிறார். இந்த கொல்லிமலை சித்தர் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோவில் இவரது குலதெய்வம் என்கிறார்கள்.
அகத்தியர் ஒருமுறை இவரது கனவில் தோன்றி, கொல்லிமலைக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவருக்கு இரண்டு ஆணிப் பாதங்கள் கிடைத்த நிலையில், அவைகளை உலக நன்மைக்காகவும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் அணிந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறாராம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை மற்றும் கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு கொல்லிமலையில் இவரிடம் தீர்வு கேட்டு பக்தர்கள் செல்கிறார்கள்..
சில நாட்களுக்கு முன்பு இவர் சொன்ன அருள்வாக்கு பக்தர்களின் கவனத்தை பெற்றிருந்தது..அதாவது உலகத்தில் சுனாமி ஏற்படும், அதர்மம் பெருகும் போது தர்மத்தை நிலைநாட்ட பஞ்சபூதங்கள் மூலம் உலகம் பேரழிவைச் சந்திக்கும்.. இஸ்ரேல்-காசா போர் மீண்டும் தொடரும்.. விமான விபத்துக்கள் உலகளவில் அதிகம் நடக்கும்.. அமெரிக்கா பெரும் புயல், மழை மற்றும் நெருப்பினால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும்..
சென்னையில் பேரழிவு ஏற்படும்.. வடசென்னை, தென்சென்னை பகுதிகள் வெள்ளம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்றெல்லாம் கூறி மிரள வைத்திருந்தார்.
இந்நிலையில், கொல்லிமலை சித்தர் நேற்றைய தினம் செய்த சம்பவம்தான் தற்போது கவனம் பெற்றுள்ளது.. குடியாத்தம்-சித்தூர் சாலையில் அமைந்துள்ளது பாக்கம் என்ற கிராமம்.. இங்குள்ள காளியம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயிலுக்கு பிரபல ஆன்மிக சித்தர் கொல்லிமலை சித்தர் நேற்றைய தினம் வருகை தந்திருந்தார்..
இதை கேள்விப்பட்டதுமே சுற்றுவட்டார பகுதியிலிருந்த பக்தர்கள், பாக்கம் கிராமத்திற்கு திரண்டு வந்துவிட்டனர்.
இதனால் அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கோயில் நிகழ்வில் பங்கேற்ற சித்தர், உலக நன்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மிளகாய் பொடி அபிஷேகம் செய்ய போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முன்னதாகவே செய்திருந்தனர்.
பிறகு, சித்தரின் கண்கள் துணியால் கட்டப்பட்டது.
பிறகு பக்தர்கள் மிளகாய்களை கல்லில் அரைத்து, அதை தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை நேரடியாக சித்தர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். சிலர் நேரடியாக சித்தரின் உடலிலும் மிளகாய் பொடி தூவி வழிபாடு மேற்கொண்டனர்.
இந்த வினோத அபிஷேகத்தை பார்த்ததுமே பலரும் ஆச்சரியத்தில் உரைந்தனர்.. மிளகாயை உடம்பில் தேய்த்தும், கரைத்து ஊற்றியும் ஒரு சலனமும் இல்லாமல் சித்தர் உட்கார்ந்திருந்தார்.
பக்தர்கள் இதை பார்த்தபடி, கைகளை கூப்பி வணங்கி நின்றனர்.இந்த வினோத வழிபாட்டின் மூலம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

