Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலெக்டர் எஸ்பி எல்லாம் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என கொஞ்சம் பேச்சா பேசுன… ஒரே மாதத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆப்பு .

0

'- Advertisement -

நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்’ என பேசிய திமுக கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.

 

Ad banner

இதையடுத்து அவர் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டவர் தர்மசெல்வன். இவர் சமீபத்தில் தான் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதாவது ”நான் சொல்வதை தான் அதிகாரிகள் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்” என பேசியிருந்தார்.

 

இதனை செல்போனில் யாரோ பதிவு செய்து ஆடியோவாக வெளியிட்டனர். இந்த ஆடியோ சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதாக சாடியிருந்தனர். அதோடு தர்மசெல்வனை உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

 

TVK ad

இதையடுத்து தர்மசெல்வன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். தான் பேசியது தவறு தான் என்றும், அப்படி பேசியதற்கு வருந்துவதாகவும் தெரிவித்து இருந்தார். இருப்பினும் திமுக தலைமை அதனை ஏற்கவில்லை.

 

இந்நிலையில் தான் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.

 

தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த தர்மசெல்வனிடம் இருந்து ஒரு மாதத்திலேயே அந்த பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு முன்பாக அந்த பொறுப்பில் தடங்கம் சுப்பிரமணியம் என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் நீக்கப்பட்ட பிறகு கடந்த மாதம் 23ம் தேதி தான் தர்மசெல்வனுக்கு பதவி வழங்கப்பட்டது. ஆனால் பதவி கிடைத்ததும் தர்மசெல்வன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையில் தான் நினைத்தால் இனி எஸ்பி, கலெக்டரையே மாற்ற முடியும் என்று பேசிய நிலையில் ஒரு மாதத்தில் அவரது பதவி என்பது பறிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது “நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்” என்று தர்மசெல்வன் பேசியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மணி தர்மபுரி திமுக எம்பியாக உள்ளார். இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவரது வயது 55. சட்டப்படிப்பை படித்தவர். அடிப்படையில் வழக்கறிஞரான மணியின் சொந்த ஊர் பாரதிபுரம் ஆகும். இவர் 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும், 2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும், 2023 முதல் தருமபுரி மேற்கு மாவட்ட திமுகவில் துணைச் செயலாளராகவும் இருந்தார்.

 

இவர் 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி சிட்டிங் திமுக எம்பியாக இருந்த செந்தில் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் மணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் அந்த தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியாவை வீழ்த்தி எம்பியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.