திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடை மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் சக்திவேல். பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில் பேக்கரி கடையின் மேல் பகுதியில் புதிதாக கடையின் பெயர் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார். அப்போது பிளக்ஸ் போர்டில் இருந்த இரும்புக்கம்பி கடையின் மேலே சென்ற மின் கம்பியின் மீது உரசி உள்ளது. இதனால் பிளக்ஸ் போர்டை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேலு படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் அலறினர். உடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சமயபுரம் போலீசாருக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.