அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பள்ளிச் சிறுவனை மதுபானம் விற்க வைத்த திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அடுத்த குழுமூா் பெரிய ஏரிக்கரையில், பள்ளிச் சிறுவன் ஒருவா் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த விடியோ பதிவு வாட்ஸ் அப்பில் நேற்று பரவியது.
இதையறிந்த செந்துறை காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுவன் திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த சங்குப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது பள்ளிச் சிறுவன் என்பதும், காலாண்டு விடுமுறைக்காக குழுமூரில் வசிக்கும் தனது உறவினா் கா்ணன் வீட்டுக்கு வந்திருப்பதும், விடியோவில் பதிவான காட்சிகளில் சிறுவன் பக்கத்தில் அமா்ந்திருப்பது அவரது சின்ன மாமா அறிவானந்தம் என்பதும், கடந்த மூன்று நாள்களாக கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்க அச்சிறுவனை, ஒன்றிய திமுக தொண்டா் அணி அமைப்பாளா் வீரா.ராஜேந்திரன் பயன்படுத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, வீரா.ராஜேந்திரன் மற்றும் அறிவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.