திருச்சியில் 10 டன் எடையுள்ள
கலப்படப் பொருட்கள் அழிப்பு
உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை.
திருச்சியில் 10 டன் எடையிலான கலப்படப் பொருட்களை உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் அழித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர், கலப்பட மருந்துகள், உணவுப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், பதப்படுத்தி வைக்கப்பட்ட இறைச்சி மற்றும் மீன் வகைகள், ரசாயணம் பூசப்பட்ட பழங்கள் என பல்வேறு வகையான பொருட்களை அவ்வப்போது நடத்தும் சோதனைகள் மூலம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் சு. ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்துள்ள, அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பாக்கு வகைகள், பான் மசாலா உள்ளிட்ட 6 டன் எடையிலான பொருட்கள், மேலும் தரநிர்ணய சட்ட விதிகளுக்கு முரணான வகையில் விநியோகிக்கப்பட்ட பொருட்கள் 4 டன் என மொத்தம் 10 டன் பொருட்களை, திருச்சி அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.N
இந்நிகழ்வின் போது அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் எஸ். சுந்தர்ராஜ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் என். பாண்டி, இ.வசந்தன், எல். ஸ்டாலின்பிரபு, டி.பொன்ராஜ் டி.சையது இப்ராகிம், எம்.வடிவேல், டி.மகாதேவன் மற்றும் காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.