அரசு ஒப்பந்தங்களில் 25% நிதி விரயத்தை தடுக்க திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் வழங்க உள்ளோம் – திருச்சி மாநாட்டில் பிஎம்சி நிர்வாகிகள் அறிவிப்பு .
அரசு ஒப்பந்தங்களில் 25% நிதி விரயத்தை தடுக்க திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் வழங்க உள்ளோம் – திருச்சி மாநாட்டில் பிஎம்சி நிர்வாகிகள் அறிவிப்பு ..
தமிழ்நாட்டின் முன்னணி பிசினஸ் நெட்வொர்க்கிங் அமைப்பான பிசினஸ் மாஸ்டர்ஸ் கம்யூனியன் (BMC) சார்பில், தொழில் முனைவோர் மாநாடு, திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட இம்மாநாட்டில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் அருள்மகேஷ், உதவி இயக்குநர் பொறியாளர் ராஜாராம், பொறியாளர் ராஜேந்திரன்,வி எல் நாகராஜ், பிரவீன், லட்சுமி பிரியா மற்றும் ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
மாநாடு குறித்து அமைப்பின் நிர்வாகிகள் அருள்மகேஷ் மற்றும் பொறியாளர் ராஜாராம் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொழில் முனைவோர்களை கூட்டிணைத்து, ஒருவருக்கொருவர் வர்த்தக ரீதியாக உதவிக் கொள்வது மற்றும் வர்த்தக நெறிமுறைகளை கற்றுக்கொடுப்பதுதான் பிஎம்சி அமைப்பின் முதன்மை கோட்பாடாகும். அரசு திட்டப்பணிகளில் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை முறையற்ற வழிகளில் வீணடிக்கப்படுகிறது. மீதமுள்ள 75 சதவீத நிதியே மக்களுக்கு சென்று சேர்கிறது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் வெளிப்படையான ஆட்சி முறைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், பிஎம்சி அமைப்பு மூலமாகத் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதன் மூலம் வீணடிக்கப்படும் அந்த 25 சதவீதப் பணத்தை மிச்சப்படுத்தி, மீண்டும் தமிழக அரசு கஜானாவிற்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் தற்போது தமிழ்நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பெங்களூரு மற்றும் கேரளாவிலும் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, எதிர்காலத்தில் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
குறைந்தபட்சம் ஜிஎஸ்டி பதிவு பெற்றிருப்பதோடு, ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தொழில் முனைவோர்களை லட்சாதிபதிகளில் இருந்து கோடிகளில் புரள செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு எங்களது அமைப்பு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

