திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.
போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொழி எடுத்தனர். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியாக, திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் இருந்து ஒத்தக்கடை வரை விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இப்பேரணிக்கு திருச்சி மாநகரக் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடினார்கள்.போலீசார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து
அங்கு அனைவரும் ஒன்று கூடி நின்று போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். “நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எந்த விதமான போதைப்பொருட்களையும் எச்சூழலிலும் பயன்படுத்த மாட்டேன்.என் குடும்பத்தையும் சுற்றுப்புறத்தையும் போதையின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்கு முயற்சி செய்வேன்.
சாமானிய மக்களின் ஒற்றுமையோடும் தலைமைத்துவப் பண்போடும் போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவேன். போதைக்கு எதிரான வலிமையான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போராடுவேன்.
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கிச் சாமானிய மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும், போதையில்லா தமிழகம் உருவாகட்டும்” என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பிறகு அனைவரும் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

