தவெக வில் இடியாக முழங்கும் கருப்பசாமியாக பொது செயலாளர் ஆனந்தை மாற்றி பிளக்ஸ் வைத்த பார் உரிமையாளர் கரிகாலன்

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை த.வெ.க-வின் காவல் தெய்வமான ‘கருப்பசாமி’ போல சித்தரித்து திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வாழ்த்துப் பதாகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.த.வெ.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்துக்கு நேற்று (ஜூலை 18) பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்குதல், கோவில்களில் தங்கத் தேர் இழுத்தல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைத்தல் என த.வெ.க கட்சியினரின் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது.
அந்த வகையில், திருச்சி மேற்கு தொகுதி தமிழக வெற்றிக்கழக
தொழிலதிபர் எம்ஜிஆர் நகர் கே.கே.என். கரிகாலன்,
மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், ஆகியோர் இணைந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு விளம்பரப் பதாகைகளை வைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் வைத்துள்ள பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
அதற்குக் காரணம், அந்த வாழ்த்துப் பதாகையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை தமிழக வெற்றிக் கழகத்தின் காவல் தெய்வமாக சித்தரித்து, ‘கருப்பசாமி’ வடிவில் வித்தியாசமான முறையில் வடிவமைப்பு செய்துள்ளனர். இந்த நூதனமான வாழ்த்துப் பதாகை தற்போது திருச்சி மாநகர மக்கள் அனைவரது பார்வையையும் ஈர்த்து, சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

