லால்குடி அருகே விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு அரசு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஏஐடியுசி பொதுச் செயலாளரும் 35 வது வார்டு கவுன்சிலருமான சுரேஷ் கோரிக்கை .
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 02) கழிவு நீா் தொட்டியை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற நபர் என இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்து உள்ளனர்.
லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியைச் சோ்ந்த தேவநாதன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வாடகைக்கு தங்கியுள்ளனா். இந்நிலையில் கும்பகோணத்தைச் சோ்ந்த தூய்மைப்பணியாளா் மு.கணேசன் (வயது 25) என்பவா் இந்த வீட்டின் கழிவு நீா் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி மயங்கி உயிருக்குப் போராடினர்.
அப்போது அவரைக் காப்பாற்ற அந்த வீட்டில் தங்கியிருந்த பிகாா் மாநிலத் தொழிலாளியான முகேஷ் குமாா் என்பவா் கழிவு நீா் தொட்டிக்குள் இறங்கியபோது அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் இருவருமே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவலறிந்த கல்லக்குடி காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து செய்து வருகின்றனர்.முன்னதாக, பலியானோர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஏஐடியுசி பொதுச் செயலாளரும் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வடுகர் பேட்டை அண்ணைநகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்வதற்காக கும்பகோணம் பகுதி நாச்சியார் கோவிலை சேர்ந்த கணேஷ் (வயது 25) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்குமார் (வயது 26) ஆகியோர் 12 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்வதற்காக பணியில் ஈடுபட்டபோது இருவரும் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.
அவர்கள் இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உடல்கள் ஊருக்கு செல்வதற்கான உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்வதோடு, இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

