முதல்வரின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி வரை தவெக நிர்வாகி அன்னை ஸ்டான்லி வினோத் தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கி சென்ற 52 தொண்டர்கள்
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகி அ. ஸ்டான்லி வினோத் தலைமையில் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி வரை 52 பேர் இருசக்கர வாகன பேரணி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
திருச்சி பொன்னகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் தேவாலயம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை

தவெக நிர்வாகி அன்னை அ. ஸ்டான்லி வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 26 இருசக்கர வாகனங்களில் 52 த.வெ.க. உறுப்பினர்கள் முதல்வர் விஜய் ஸ்டிக்கர் ஒட்டிய ஹெல்மெட் உடன் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்ட வாகனமும் உடன் சென்றது. பேரணியைத் தொடர்ந்து, புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவிகளுக்கு சலவை சோப்பு மற்றும் குளியல் சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. அடுத்ததாக, தஞ்சாவூர் மாவட்டம் மணையேரிப்பட்டியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் 30 பேருக்கு உணவும், அன்றாட உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 300 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வடிங்கப்பட்டன.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் 200 பேருக்கு பழச்சாறு, பிஸ்கட் மற்றும் தொழுகைப் பாய்கள் வழங்கப்பட்டன. அதன்பின், கிட்டாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், தேசிய சேவைத் திட்ட (என்.எஸ்.எஸ்.) தன்னார்வலர்களுடன் இணைந்து 52 மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக, வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், பேரணியில் பங்கேற்ற 52 பேரும் கலந்துகொண்ட ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

