திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க மிளகாய் பொடி, கத்தியுடன் சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட கும்பல்
திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கொண்ட கும்பல் கத்தி ,மிளகாய் பொடி பறிமுதல் .

திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (வயது 21) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தி, மிளகாய் தூள் பாக்கெட் 2 , நைலான் கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பாக அரவிந்த் , வழுக்கை வினோத், டார்வின் ஆன்றோ, ரவுடி சூர்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.

