தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது,
குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப ஒப்படைத்தால், அந்த ரூ.10-ஐ குடிமகன்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த காலி பாட்டில் வாங்கும் நடைமுறையால் தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, இந்தத் திட்டத்தை முற்றிலும் மறுசீரமைத்து, ஊழியர்கள் அல்லாத வேறு நபர்களைக் கொண்டோ அல்லது புதிய தொழில்நுட்பம் மூலமாகவோ பாட்டில்களைப் பெற அரசு ஆலோசித்து வருவதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் பாரத்தைக் குறைக்கவும், இந்தத் திட்டத்தை இன்னும் எளிமையாக்கவும் டாஸ்மாக் கடைகளிலேயே ‘இயந்திரம்’ (Reverse Vending Machine) மூலம் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற அதிகாரிகள் புதிய திட்டம் போட்டுள்ளனர்.
இனி குடித்தவர்கள் தங்களின் காலி பாட்டிலை இந்த இயந்திரத்தில் போட்டால், அதற்கான ரூ.10 டெபாசிட் தொகை டிஜிட்டலாகவோ அல்லது டோக்கன் மூலமாகவோ கச்சிதமாகத் திரும்பக் கிடைத்துவிடும். இந்த புதிய இயந்திரம் சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் வைத்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. பாட்டிலை திரும்பப் பெறு இந்த சோதனை சக்சஸ் ஆனதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாகத் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்த மெஷினை நிறுவ அதிகாரிகள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த மிஷின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நிறுவப்பட்டால் ஊழியர்களின் பணிச்சுமை சிறிது குறையும் என்பது உண்மை.

