துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான பரிதாப சம்பவம் .

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர் பணிமனைக்குச் சொந்தமான அரசு பேருந்து எதிர்பாராத விதமாக தவமணி மீது மோதியது.
இதில் வலது காலில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தவமணியின் உறவினர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவர் ராஜேந்திரன் (வயது 47) என்பவரை துறையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

