மேடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்த விஜயின் கட்சி நிர்வாகி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த பயங்கர சம்பவம்.
தமிழகத்தில் தேர்தல் களம் ஓய்ந்து, முடிவுகள் வெளியாகி மக்கள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே. நகர் 43-வது வார்டு வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் தினேஷ், என்னும் பாம்பு தினேஷ் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த தினேஷ் அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என அச்சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பயந்துபோயிருந்த சிறுமி, பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாகத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தினேஷ் அத்துமீறியது ஆதாரங்களுடன் உறுதியானது. எனினும், கடந்த திங்கள்கிழமை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தினேஷ் அந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவரை உடனடியாகக் கைது செய்வதில் சிக்கல் நீடித்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு, தலைமறைவாக இருந்த அவரைத் தேடி வந்த போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ரீதியாகப் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் சூழலில், அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகி ஒருவர் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கெதிரான இத்தகைய வன்கொடுமைகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே திருவள்ளூர் த.வெ.க. வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதுமட்டுமன்றி, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் என்பவர் மீதும் அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் சீண்டல் புகாரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சென்று அளித்தார்.
இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி 6 மாதங்களுக்கு முன்பே கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது தான். இது கட்சி நிர்வாகத்திற்குள் மகளிர் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அடுத்தடுத்து வரும் இத்தகைய புகார்களைத் த.வெ.க. தலைமை மெத்தனமாகக் கையாண்டால், அது பெண்களின் பாதுகாப்பு குறித்த அக்கட்சியின் வாக்குறுதிகள் மீதான நம்பகத்தன்மையைச் சிதைத்துவிடும். அத்துடன், பொதுவெளியில் கண்டனங்களைப் பதிவு செய்வதும், கட்சிக்குள் களையெடுப்பதும் மட்டுமே கட்சியின் எதிர்கால நலனுக்கு உதவும்.
தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் ஒரு இயக்கம், தன் நிர்வாகிகளின் ஒழுக்கக் குறைபாடுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது மிகப்பெரிய அரசியல் சரிவைச் சந்திக்க நேரிடும் என்பது நிதர்சனம்.

