தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்..

இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் யாருடையது? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வரும்நிலையில், இது அதிமுகவிலும் எதிரொலித்திருப்பதாகவே தெரிகிறது. இந்த ஆலோசனையில் விஜய்யின் தாக்கம் குறித்து மிக முக்கியமான ஒரு கணக்கை கட்சியின் மூத்த தலைவர்கள் முன்வைத்துள்ளனர். அது என்ன?
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற விசாரணையில் பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்.. கட்சியின் சீனியர்களான கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், உதயக்குமார், ராஜேந்திரபாலாஜி என ஒரு ரவுண்ட் அடித்து நிலவரத்தைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அவர்கள் அனைவரிடமிருந்தும் எடப்பாடிக்குக் கிடைத்த பதில் ஒன்றுதான்: “நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம்” என அவர்கள் உறுதியாகச் சொல்லி உள்ளார்களாம்.
குறிப்பாக, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் எடப்பாடியிடம், “இந்த தேர்தலில் நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி விஜய்யின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. 8 சதவீத வாக்குகளை மட்டுமே விஜய் வாங்கினால், அது அதிமுகவை பாதிக்கும்.
காரணம், இது ஆளும்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குகள். இது நமக்கு கிடைக்க வேண்டியது. இந்த வாக்குகள் விஜய்க்கு போயிருக்கிறது. அதனால், நமக்கு கிடைக்க வேண்டியவை விஜய்க்கு போயிருப்பது நமக்கு பாதகம், திமுகவுக்கு சாதகம்.
அதே சமயம் 20 அல்லது 25 சதவீத வாக்குகளை விஜய் வாங்கினால் அது நமக்கு சாதகம். திமுகவுக்கு பாதகம். காரணம், அந்த 25 சதவீதத்தில் ஏற்கனவே நமக்கு வரவேண்டிய 8 சதவீதத்தை கழித்து விட்டால் மீதமுள்ள 17 சதவீத வாக்குகளை எங்கிருந்து விஜய் எடுக்க முடியும்? திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் சீமான் கட்சியிடமிருந்து தான் எடுக்க முடியும்.
அந்த வகையில் சீமானிடமிருந்து 2 சதவீத வாக்குகள் தான் விஜய்க்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. மீதமுள்ள 15 சதவீத வாக்குகளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்துதான் கிடைக்கும். அதனால், திமுகவுக்கு இது பாதகம். திமுகவின் வோட் பேங்க்கில் 15 சதவீத வாக்குகள் பிரிந்தால் அது பெரிய அளவில் திமுகவுக்கு ஷாக் கொடுக்கும். அந்த ஷாக் தான் நம்மளை வெற்றிபெற வைக்கிறது” என்று விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.
இதனால் எடப்பாடியிடமும் ஒருவித நம்பிக்கை ஒளி பளிச்சிடுகிறது. மேலும், ஸ்டாலின் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்யின் வெற்றி எப்படி இருக்கிறது? என்று விசாரித்தபோது, பெரம்பூரில் விஜய் ஜெயிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.
விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா அல்லது திமுகவின் வெற்றியைத் தடுக்குமா என்கிற விவாதங்களுக்கு மத்தியில், சீனியர்களின் இந்தக் கணக்கு எடப்பாடியைத் தேர்தல் முடிவுகளை நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்க வைத்துள்ளது.

