சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியில் இருந்தவர் 27 வயது பிரியங்கா. இவருக்கும் அதே போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சேகருக்கும் ஜனவரி 24ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராயபுரம் தம்பு லைன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் சேகர், வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த பிரியங்கா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த சேகர், தனது காதல் மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ராயபுரம் உதவி கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் பிரியங்கா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.