Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள் , ஆனால் துரோகிகளை …. அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் அறிக்கை

0

 

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

“நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோகிகளை.. “.

இன்று காலை வந்த ஒரு நாளிதழில்  அமமுகவில் இருந்து சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததாக படத்துடன் செய்தி வந்துள்ளது. குறிப்பாக யார் என்னென்ன பதவியில் வகித்து வந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கைகளை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு அதனுடைய நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்க வேண்டும்.

காரணம் அமமுகவில் இருந்து பொறுப்புக்குகளுடன் விலகியதாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் அமுமுகவில், தாங்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து பல மாதங்களுக்கு முன்னரே தாங்களாகவே விலகிக் கொண்டுள்ளனர, மீதம் உள்ளவர்கள் செயலின்மையால் அவர்கள் வைத்து வந்த பதவிகளில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வகித்து வந்த பதவிகளுக்கு, பல மாதங்களுக்கு முன்னரே தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பணிகளை செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்த சேவைகள், நலத்திட்ட உதவிகள் போன்ற பணிகள் சில நாளிதழ்களில் செய்தியாகவும் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, இத்துடன் 51 வட்டச் செயலாளராக முன்பு இருந்தவர் ஜூலை மாதம் எங்களுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தையும்,

 

மற்றொரு வட்டத்தில் (52), ஏற்கனவே இருந்தவர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறொருவர் வட்ட செயலாளராக சிறப்பாக செயல்படும் பத்திரிகை செய்திகளையும் அனுப்பி உள்ளேன்.

படத்துடன், விவரங்களுடன் வரும் செய்திகளின் மீது மக்களுக்கு, குறிப்பாக அதுபோன்ற பத்திரிகையை, மூன்றாம் தலைமுறையாக நாங்கள் மதித்து, படித்து வரும் வேளையில், அதன் நம்பகத்தன்மை குறித்த எண்ணம் வரும் என்றால், இது நாள் வரை அப்பத்திரிக்கை மீது வைத்திருந்த நம்பிக்கையை அது பொய்ப்பிக்கும்.

எனவே மீண்டும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் செய்திகளை பிரசரிக்கும் முன்னர், அது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

படித்த, ஏழை, நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வர அச்சப்பட்டு, ஒரு அருவெறுப்புடன் அரசியலை நோக்கும் வேளையில், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் தலைமையில் இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது புதிய வாக்காள மாணவர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு, கண்ணியமான, எதற்கும் சமரசம் செய்யாத, நுட்பமான அரசியலை நாங்கள் முன்னெடுத்து வரும் வேளையில், இது போன்ற பொய், புரட்டு செய்திகளை மக்கள், அவர்களது வலது கையால் புறந்தள்ளி கடந்து செல்வர்.

இதுபோன்ற நகைப்புக்கு உள்ளாகும் செய்திகளை பத்திரிகைகளுக்கும் கொடுத்து, தங்கள் கட்சி நிர்வாகிகளாலே ஏமாற்றப்பட்ட “அக்கட்சி தலைமைக்கு” நாம் கேட்டுக் கொள்வதெல்லாம், நல்லவர்களை நம்புங்கள், கெட்டவர்களை கூட நம்புங்கள். ஆனால் துரோக சிந்தனை உள்ளவர்களை குறிப்பாக போரிலே புறமுதுகிட்டு ஓடி வந்தவர்களை நம்பாதீர்கள். வாழ்நாளில் ஒரு தடவை துரோகம் செய்தவன், எக்காலத்திலும் மீண்டும் துரோகம் செய்ய தயங்க மாட்டான் என்பது நம் முன்னோர் நமக்கு உரைத்த மொழிகள்.

மற்றபடி மற்றவர்களுக்கு, பணி சிறக்க “உங்களுக்கும்” வாழ்த்துக்கள் கூறுவோம். ஏனென்றால் நாங்கள் தன்மானத் தமிழர், மக்கள்செல்வரின்
தம்பிகள்.

போரிலே பகைவருக்கு பயந்து, உன் மகன் ஓடி விட்டான் என்று செய்தியை கேட்ட தாய் “என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன்” என்று சூழரைத்த வீரத்தாய்மார்களால் விதைக்கப்பட்ட இம்மண்ணின் புதல்வர்கள் நாங்கள்.

என ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.