வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி. திரும்ப கேட்கச் சென்ற வாலிபர்களுக்கு அடி உதை 2 பேர் கைது. வக்கீலுக்கு வலை .
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி;

திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன்
(வயது 38). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
இதை அறிந்த திருச்சி தில்லைநகர் 10 -வது கிராஸ் பகுதியில் வசிக்கும் அருள்ஜோதி என்பவர் அவரிடம் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். அதன் பேரில் பூமிநாதன் ரூபாய் 6 லட்சம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி வேலைக்கு அனுப்பவில்லை.
அதைத்தொடர்ந்து பூமிநாதன் தனது நண்பர் கருணாகரன் என்பவரை அழைத்துக் கொண்டு அருள்ஜோதியை பார்க்கச் சென்றார்.
ஆனால் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து வீடு திரும்பிய அவர்கள் தில்லை நகர் 10 வது கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகாமையில் வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இரண்டு பேரையும் வழிமறித்து தாக்கினர் .இதில் பூமிநாதன், கருணாகரன் ஆகிய இருவருக்கும் முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .
இது தொடர்பாக பூமிநாதன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர்
8 -வது கிராஸ் கீழத் தெரு வடவூர் பகுதியைச் சேர்ந்த சோனி என்கிற பிரகாஷ் ( 29 ), வடவூர் பாம்பு என்கிற சரவணன் (40) ஆகிய இரண்டு பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அருள்ஜோதியின் வக்கீல் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது .
அதைத் தொடர்ந்து வக்கீலையும் போலீசார் தேடி வருகின்றனர்.