தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வப்போது, மூதாட்டியை அவரது மகன் பார்த்துவிட்டுச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர், வீட்டின் அருகே இருந்த மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் போலீஸார் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ், தென்காசி ஏடிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு, இறந்து கிடந்த மூதாட்டியின் உடலில் ஆடை இன்றியும், முகம் மட்டும் சாணத்திற்குள் திணித்தபடியும் இருந்தது. இதனால், யாரேனும் மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்று கொலை செய்தனரா? என்கிற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீஸாருக்கு திப்பணம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமர் (வயது 72) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மூதாட்டி மறுத்து ஆவேசமாக திட்டியதால், ஆத்திரத்தில் கொலை செய்து சானம் கொட்டப்பட்ட குழியில் கொண்டு வந்து போட்டதாகவும் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீஸார் முதியவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.