திருச்சியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகாறில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகேயுள்ள விவேகாநந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துப்பாண்டி (27). திருமணமாகாத இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது திருச்சி வரும் இவர் பெற்றோருடன் சிலநாள்கள் தக்கியிருந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு திருச்சி வரும்போது அவரது நண்பரின் மீன் கடை ஒன்றில் வேலைபார்ப்பதும், வேலை முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் வழக்கம். அந்த வகையில் அண்மையில் திருச்சி வந்த அவர் மீன்கடை வேலை முடிந்து, நேற்று மாலை, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்டான்லி என்கிற பாபா என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
ஏற்கெனவே இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. பிறகு முத்துப்பாண்டி தனது வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஸ்டான்லி, மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே புத்து நாகம்மாள் கோயில் பின்புறம் நடந்து சென்றபோது, முத்துப்பாண்டியை வழிமறித்து அவரிடம் மீண்டும் தகறாறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்டான்லி, அவர் வைத்திருந்த கத்தியால் கழுத்து பகுதியில் முத்துப்பாண்டியை குத்தியுள்ளார். மேலும் கீழே சாய்ந்த முத்துப்பாண்டியின் கழுத்தையும் அறுத்துள்ளார். முத்துப்பாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்தபோது முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய ஸ்டான்லியை மடக்கிப் பிடித்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொன்மலை போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
இதனையடுத்து முத்துப்பாண்யின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் வழக்குப் பதிந்து ஸ்டான்லியை கைது செய்தனர்.