Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமான நிலைய புதிய முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 2ம் தேதி திருச்சி வருகை .

0

 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் இருக்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட வில்லை. இந்தநிலையில் அவர்களுக்கான பட்டமளிப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக புதுடெல்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார்.

அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வருகிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.


பிரதமர் நரேந்திரமோடி திருச்சி வருவதை முன்னிட்டு திருச்சி விமானநிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திருச்சி மாநகர போலீசார் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.