திருச்சியில்
சொத்துவரி செலுத்தாத
9 பேரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு அதனை செலுத்த உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கால அவகாசம் கொடுக்கப்பட்டும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தவகையில் மொத்தம் 9 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், 190 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கட்டணம் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு 31.03.2024 வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.