சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். மக்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்; இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .