சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை திடீரென அந்த பெண்ணின் முன் காண்பித்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அவர் தனது செல்போனில் அவரது செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த நபருக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது அவர் ‘நான் போலீஸ்தான் உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கொள்’ என்று பெண்ணிடம் சவால் விடுத்துள்ளார். பின்னர் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே அந்த ஆசாமி பாதியில் ரயிலில் இருந்து தப்பி குதித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ரயில்வே காவலர்களிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி புகார் அளித்ததோடு அந்த வீடியோக்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த புகாரில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் வீடியோக்களை சரி பார்த்துள்ளனர்.
அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.