ஒரு நாள் இரவு சோதனை சாவடி பணியில் ரூ.2.76 லட்சம் வசூல்.லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடியில், கேரளா செல்லும் வாகனங்களை சோதனையிட வணிகவரி, போக்குவரத்து, வனத்துறைக்கு என தனித்தனி சோதனை சாவடிகள் உள்ளன.
இங்கு வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் பெண் ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி(வயது 57) நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு பணி முடிந்து காரில் கணவர் காட்சனுடன் புறப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை மறித்து சோதனையிட்டு, 2.76 லட்சம் ரூபாய், லாரி டிரைவர்களிடம் ‘ஆட்டை’ போட்ட காய்கறி, பழம், முட்டை, பூ, பேரிச்சம்பழம், கடலைமிட்டாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி, அரசு பொறியியல் கல்லுாரி அருகே கிருஷ்ணாநகரில் அவரது ஆடம்பர பங்களாவில், டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், 11 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். பிரேமா ஞானகுமாரியின் கணவர் காட்சன் உடன் இருந்தார்.
போலீசார் கூறுகையில், ‘தற்போது வசிக்கும் பங்களா, என்.ஜி.ஓ., காலனியில் உள்ள திருமண மண்டபம், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபத்தில் கட்டியுள்ள கட்டடங்கள் உள்ளிட்ட 12 சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், பிரேமா ஞானகுமாரியை நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்தார்.