திருச்சியில் கேமராவுடன் தானியங்கி சிக்னல் :
காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் சந்திப்பில் வாகனங்கள் இடையூறின்றி செல்லும் வகையில் கண்காணிப்பு காமிராக்களுடன் கூடிய தானியங்கி சிக்னல் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில்,
திருச்சி -சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் காவிரி பாலத்துக்கு முன்பு உள்ள சஞ்சீவி நகர் சந்திப்பும் ஒன்று. இதில் 10 இடங்களில் ஏற்கெனவே தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
அந்த வகையில் சஞ்சீவி நகர் பகுதியிலும் போக்குவரத்துகளை எளிமையாக்க, சிக்னல்கள் அமைக்க மாநகர காவல் ஆணையரகம் முடிவு செய்திருந்தது.
விபத்துகள் ஏற்பட்டால் வாகன பதிவெண்களை கண்டறியும் விதமாக உயர்ரக நவீன தானியங்கி காமிராக்கள் 2, மற்றும் கண்காணிப்பு காமிராக்கள் 6, ஒலிப்பெருக்கி உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் மாநகர காவல் ஆணையர் எம். சத்தியபிரியா பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிக்னலை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு காவல் ஆணையர், நீர், மோர் வழங்கி பாராட்டினார்.
மேலும் கடுமையான வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கும் நீர், மோர் வழங்கப்பட்டது.