கர்நாடக நிறுவனத்தின் பெயரில் விற்பனை
மணப்பாறையில் 5 அரிசி ஆலைகள் மீது போலீசார் வழக்கு.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மஞ்சு கொண்டா இவர் கர்நாடகத்தில் ஸ்ரீ நவாப் அக்ஷயா பொன்னி அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் அரிசி நவாப் பொன்னி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஐந்து அரிசி ஆலைகள் மேற்கண்ட நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளூரில் அரிசி விற்பனை செய்வதாக சக்கரவர்த்தி மஞ்சு கொண்டாவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். அதில் காப்புரிமை சட்டத்தின் கீழ் தமது கம்பெனி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை மணப்பாறை பகுதியில் உள்ள ஐந்து அரிசி ஆலைகள் தவறாக பயன்படுத்தி தமது வியாபாரத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
அதன் பேரில் 5 ஆலைகள் மீதும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.