கோடைக் கால நோய்களைத் தடுக்கும் இயற்கை உணவுகள் .
கோடைக் கால நோய்களைத் தடுக்கும் இயற்கை உணவுகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி
தென்னூர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப உணவு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் நீண்ட பகலும், குறைந்த இரவும் காணப்படும். பகல் நீடித்துக் காணப்படுவதால் தட்பவெப்பம் அதிகரித்து நமது உடலிலும் வெப்பம் கூடும்போது அது ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும். வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் தேவை அதிகரிக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் வழக்கம் போலவே நீர் அருந்துவோம். அதே போலத் தான் திட உணவுகளையும் சாப்பிடுவோம். கோடைகாலம் துவங்கியதும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும். வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், முலாம்பழம், பனைநுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீர் அருந்தும் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மண்பானையில் ஊற்றிய நீருடன் வெட்டி வேரைப்போட்டு ஊறியதும் அந்த நீரை அருந்தலாம்.
நன்னாரி சர்பத், நீர் மோர் தவிர பானகம் அருந்துவதும் நல்லது. தினம் ஒரு கீரை என ஒவ்வொரு நாளும் பசலைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பருப்புக்கீரை, முள்ளங்கிக்கீரை, புளிச்சக்கீரை மற்றும் முள்ளங்கி, வாழைத்தண்டு போன்றவற்றை தினமும் சமைத்து உண்பதால் வெக்கை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். பழைய சோறு நீராகாரம் உண்ணலாம். உடலில் நீர் சத்து பற்றாக்குறையில் காரணமாக தசைப்பிடிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், மலச்சிக்கல் என பல பொதுவான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீர் சத்து இழப்பை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துதல், சிறுநீரகங்கள் வழியாக கழிவுகளை அகற்றுதல், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரித்தல் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளையும் பாதிக்கும்.
நம் உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது
வாய் வறண்டு போதல் அல்லது துர்நாற்றம் ஏற்படும். உடலில் நீர் இழப்பு நிகழும்போது நம் உடல் ஈரப்பதத்தை இழக்கிறது, இது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன் தோலில் சிவப்பு நிறத்தை உருவாக்கும்.நாள் முழுவதும் தொடர்ந்து நீர் சத்தை இழக்கும்போது, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி கூட ஏற்படும். ஆழமான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால், நீங்கள் போதுமான நீர் சத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை குறிக்கும்
நீர் சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடலில் நீர் சத்தை உரிய முறையில் பராமரித்தால் எண்ணற்ற நோய்களை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மிகவும் முக்கியம். எனவே ஆரோக்கியமான, நன்மை நிறைந்த வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள் என்றார்.
முன்னதாக .பள்ளி ஆசிரியர் லாரன்ஸ் அமலின் சவுரி ராஜ் வரவேற்று, நிறைவாக நன்றி கூறினார்.