திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியும் , ஆம்னி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட 9 பேர் ஆம்னி வேனில் கும்பகோணத்திற்கு கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து நாமக்கலுக்கு மரக்கட்டைகள் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் திருவாசி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்னி வேனில் பயணம் செய்த முத்துசாமி (வயது 58), ஆனந்தாயி (57), தாவணா ஸ்ரீ (09), திருமூர்த்தி (43), சந்தோஷ்குமார் (31), அப்பு(55) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகிய 3 பேர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விபத்து காரணமாக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.