திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்ததில், அவர் ரூபாய் 4.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் ரூ.47.67 லட்சம் மதிப்பிலான 839 கிராம் தங்கத்தை பசை வடிவிலும், தங்க சங்கிலிகளாகவும் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (வயது 42) என்பதும், துபாயிலிருந்து தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 51.92 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.