பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு அர்ச்சனையில்
தமிழ் மந்திர வழிபாட்டுக்கு அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.
மணியரசன் பேட்டி.
தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது ;-

பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நன்னீராட்டு விழாவுக்கு முன்பும், நன்னீராட்டின் போதும்,அதற்குப் பின்பும் கருவறை ,வேள்விசாலை, கோபுர கலசம் உள்ளிட்ட இடங்களில் பழனி ஆண்டவர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தமிழ் மந்திரங்கள் மூலம் கிரியை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து கடந்த டிசம்பர் 21 ம் தேதி இந்து சமய அறநிலைதுறை ஆணையர் குமரகுருபாரனிடம் மனு அளித்தோம்.
அப்போது அவர் தமிழ் வழிபாட்டுக்காக தமிழக அரசு புதிதாக ஒரு குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரை வந்த பிறகு தான் தமிழ் வழி அர்ச்சனை தமிழ் வழி குடமுழுக்கு ஆகியவற்றை செயல்படுத்த முடியும் என்றார்.
தமிழில் அர்ச்சனை நடத்த தடைகள் எதுவும் இல்லாத நிலையில் ஆணையரின் பதில் முரணாக உள்ளது. ஆகவே பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கில் அனைத்து வகை அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் சரிபாதியாக தமிழ் மந்திர வழிபாடும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை )காலை 10 மணிக்கு பழனி நகரில் மயில் சதுக்கத்தில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்த பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கூச்சலூர் ராச யோக சித்தர் பீட மடாதிபதி குச்சனூர் கிழார், வள்ளலார், பணியகம் ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், ராமராசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.