திருச்சியில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி கே கே நகர் அருகேயுள்ள கே. சாத்தனூர், களத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜோதிமணி (வயது 29). முதுகலை பட்டப்படிப்பு முடித்த நிலையில் அவரது திருமணத்துக்கு பெற்றோர் வரன் தேடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஜோதிமணி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் இவரை விட வயது குறைவு என்பதாலும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவரை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.
இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாராம்.
இந்த தகவல் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலில்தான் ஜோதி மணிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த அவர் அன்று மாலையே, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதிக்காத நிலையில் காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே. சாத்தனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.