கணிதம், அறிவியலை பார்த்து மாணவர்கள் இனி பயப்பட வேண்டாம். வானவில் மன்றம் குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
கணிதம் அறிவியலை பார்த்து மாணவர்கள் இனி பயப்பட வேண்டாம். 6,7,8 வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை மூலம் அறிவியல், கணிதத்தை எளிதாக புரிந்து கொள்ளும் எளிய வடிவமே வானவில் மன்றம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழக முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசும்போது கூறியதாவது:-
வானவில் மன்ற திட்டமானது சட்டமன்ற கூட்டத் தொடரில் 2022-23 ல் செயல்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செய்முறை பயிற்சி மூலம் கணிதம் மற்றும் அறிவியலை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். மாணவர்கள் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்டு கல்வி பயில வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 25 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு தாய் உள்ளத்தோடு தமிழக அரசு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதனை எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் தொடங்கி வைக்க இசைவு தந்த முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தின் சாசனத்தின் 51 ஏ ஹெச் பிரிவு அனைத்து பொதுமக்களும் அறிவியல் மனப்பான்மையை பெற வேண்டும் என கூறுகிறது.
அதனை செயல்படுத்தும் வண்ணமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கணிதம் மற்றும் அறிவியலை பார்த்து மாணவர்கள் பயப்பட வேண்டாம்.
அது உங்கள் மூளைக்குள் இருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.
இந்த திட்டத்திற்காக 710 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனை மாணவ மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் உலகை கணிதமும் அறிவியலும் தான் ஆளப்போகிறது என்று சொல்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கக்கூடிய மைக்ரோ பிராசசர் என்பதே பெரு மூளையின் செயல்பாடு தான்.
பெரியார் நான் சொல்வதை நம்பாதீர்கள். எதையும் பகுத்தறிந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அவரது கூற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணமாக வானவில் மன்றம் திட்டம் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.