வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்கும் இல்லங்களை ஏற்படுத்த மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
ஸ்ரீரங்கத்திற்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க இலவச தங்கும் இல்லங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
மக்கள்நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
திருப்பதிக்கு நிகராக வளர்ச்சியடைய வேண்டிய ஒரு புண்ணிய பூமி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில். ஆனால் ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்க வரும் ஏழை, எளிய மக்கள் இலவசமாக தங்க எந்தவித அடிப்படை உள்கட்டமைப்பு வசதியும் இல்லை என்பது மிக பெரிய குறையாக உள்ளது.
மேலும் முந்தைய காலகட்டத்தில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக தர்ம சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியவர்கள் திருச்சி மாநகரிலும், ஸ்ரீரங்க நகர வீதிகளிலும் ஏற்படுத்திய அன்னதான கூடங்கள் மற்றும் சத்திரங்கள் எல்லாம் தற்பொழுது திருமண மண்டபங்களாகவும், கட்டணம் செலுத்தி தங்குமிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பண்டைய காலம் தொட்டு மரபு மாறாமல் மாட்டு வண்டிகளிலும், பேருந்துகளிலும் அரங்கநாதசுவாமியை தரிசிக்க வெளியூரிலிருந்து வரும் ஏழை, எளிய பக்தர்கள் ஸ்ரீரங்கம் நகர வீதிகளில் படுத்து உறங்கும் துர்பாக்கிய சூழல் தற்பொழுது உள்ளது.
மேலும் கடந்த ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்கள் தங்க யாத்ரி நிவாஷ் அமைக்கப்பட்டது பெரிய வரவேற்ப்பை பெற்றது. ஆனால் இந்த யாத்ரி நிவாஷில் கட்டணம் செலுத்தி தங்குவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் தற்பொழுதைய தமிழக அரசு ஆன்மீக விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மிக குறிப்பாக ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் *நாள் முழுவதுமான அன்னதான திட்டம்* இதற்கு மிகப்பெரிய உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வரும் ஏழை, எளிய பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக ஒன்றிற்கும் மேற்பட்ட *இலவச தங்குமிடத்தை* தமிழக அரசு ஏற்படுத்தினால் கூடுதல் சிறப்பாக அமையும் என்பது மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டத்தின் கோரிக்கையாகும்.
மேலும் மேற்படி இலவச தங்குமிடம் அமைக்க ஸ்ரீரங்கம் திருக்கோவில் நிர்வாகத்திடம் போதிய இடவசதி உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீரங்கம் நகர வீதிகளில் நான்கு இனங்களுக்கான அடிமனை அடிப்படையிலான ஏலம் விடப்பட்டது இங்கு குறிப்பிடதக்கது.
எனவே தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர், ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் மிககுறிப்பாக ஏழை, எளிய பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவில் தங்குவதற்கு ஏதுவாக *இலவச தங்கும் நிலையங்களை* ஏற்படுத்தி தருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அறிக்கையில் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.