“உழவுக்கு வந்தனை செய்வோம்” என்ற முழக்கத்துடன் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.
விவசாயமே இந்திய நாட்டின் முதுகெலும்பாகும்.நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60% மேற்பட்ட மக்கள் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் .
உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உயர்ந்த மதிப்பளிக்க வேண்டும்.

கணினியில் வேலை பார்ப்பவர்களை விட கழனியில் வேலை பார்ப்பவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.
தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமையை மாணவர்கள் உணரும் விதமாக காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் விவசாய நிலங்களுக்குச் சென்று அங்கு வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி, இனிப்புகள் வழங்கினர்.
விவசாயிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் தங்களை சந்தித்ததில் விவசாயிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் கீதா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் சித்ரா, தேவ சுந்தரி ,சத்யா, நிர்மலா ,தினேஷ் ஆகியோர் விவசாயத்தின் பெருமை குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
விவசாயத்தை பெருமைப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெரிதும் பாராட்டினர்.