Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

0

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 9-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதி, கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை மறுதினம் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.