Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா விடுதலை. உறவினர்கள் நம்பிக்கை.

0

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக இருப்பதாக அவரது உறவுகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் வரும் நிலையில், சசிகலா வெளியே வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,ரூ 10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பிறகு சசிகலா தனது கணமவர் ம. நடராசன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும், நடராசன் மறைந்த பிறகு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு என இரண்டு முறை மட்டுமே பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருந்த நிலையில், எப்போது சசிகலா விடுதலையாவார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தண்டனைக் காலம் முடிந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத்துறை பதில் கூறியிருந்தது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை அவரது வழக்கறிஞர்கள் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சசிகலா விரைவில் விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளியான போதும், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அவரது தரப்பில் அமைதிகாத்தனர்.
நன்னடத்தை, சிறையில் கன்னட மொழியைக் கற்றது போன்ற காரணங்களால் தண்டனைக்காலம் முடியும் முன்பே வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி சசிகலா விடுதலையாக இருக்கிறார் என தஞ்சாவூரில் உள்ள அவரது உறவுகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது குறித்து சசிகலா உறவுகளுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில்

“சசிகலா வரும் 3-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வாய்மொழியாகவே, அவரது தரப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளது. முறைப்படி அதற்கான எழுத்துபூர்வமான ஆர்டருடைய சான்றிதழ் இன்னும் சசிகலாவின் கைக்கு வரவில்லை. விடுதலை குறித்த ஆர்டர் வரும் திங்கள்கிழமை சசிகலாவிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அதன் பிறகே எந்தத் தேதியில் விடுதலையாகிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியவரும். கிட்டதட்ட நாளை காலை உறுதியான தகவல் சசிகலா தரப்புக்கு வந்துவிடும். சசிகலாவை பொறுத்தவரை ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு முன்பே வெளியே வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது விடுதலையான பிறகு சென்னை வரும் அவர், நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. போயஸ் கார்டனின் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்திற்கு எதிரிலேயே சசிகலாவிற்காக புதிய வீடு ஒன்று தயாராகி வருகிறது. அதற்கான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால் தியாகராயா நகரில் உள்ள இளவரசியின் வீட்டிலேயே தங்க உள்ளார்.


வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் வருகிறது.

 

அன்றைய தினத்தில் சென்னையில் இருக்க வேண்டும் என்பது சசிகலாவின் எண்ணமாக இருக்கிறது. அதற்காக 3-ம் தேதி விடுதலையாகி வெளியே வருவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டன. ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது சமாதிக்கு சென்று மாலையிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு, அரசியலில் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடுவதற்கு சசிகலா தயாராகி விட்டார்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.