Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தடையை மீறிய குஷ்பு கைது

தடையை மீறிய குஷ்பு கைது

0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாக பேசிய வீடியோ சமூக ஊடங்கங்களில் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மனுதர்மத்தை தடை செய்யவேண்டும் என சென்னையில் பிரமாண்ட போராட்டம் நடத்தினார் திருமாவளவன். அதில் தனது வீடியோ திரித்து பரப்பப்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும் மனுதர்மம் குறித்து விவாதம் நடத்த தயார் எனவும் அவர் சவால் விடுத்தார். இந்நிலையில் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனொரு கட்டமாக திருமாவளவன் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் இன்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சங்பரிவார் அமைப்புகள் மீது இன்று காலை 10 மணிக்கு சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு தனித்தனியே மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிதம்பரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

மேலும் போராட்டம் நடைபெற்றால் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாஜகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர். காவல்துறை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீ அபினவ் ஆகியோர் வந்திருந்தனர்.
இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் அதிகாரிகள், இரு தரப்பபினரின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறிவித்தனர்.

ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என பாஜகவினரும், மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அறிவித்ததால் சிதம்பரத்தில் பதற்றமான சூழல் உருவாகியது.
எனவே பாஜகவினர் கடலூர் மாவட்டத்திற்கு நுழைய முடியாதவாறு மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் கண்காணிப்பு பணியிலும் உள்ளனர்.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.
எனினும் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.