திருச்சியில் நடைபெற்ற பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சியில் நடைபெற்ற பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க கருத்தரங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசுடமை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் இரா. புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க இணைச் செயலாளர் கே.ஜெயராமன் வரவேற்றார்.
கருத்தரங்கில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. ஆனந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நான்கு அரசுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கடும் போட்டி நிறைந்த சூழலிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கணிசமான தொகையை லாபமாக வழங்கி வரும் இந்த நிறுவனங்களைப் பாதுகாத்து, தொடர்ந்து மக்களுக்கு சேவை வழங்க வேண்டியது அவசியமாகும். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து ஓய்வுபெற்ற வர்களுக்கு ஓய்வூதியம் என்பது சட்டபூர்வமான உரிமையாகும். இந்த ஓய்வூதியத்தை 60 வயதை எட்டிய அனைவருக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் சி.முத்துக்குமாரசாமி பேசுகையில், 1995 ஓய்வூதிய பலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும், பெறவும் இந்த நிறுவனங்கள் அரசுத் துறையிலேயே நீடிக்க வேண்டியது அவசியம் என்றார்.
இக்கருத்தரங்கில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணைச் செயலாளர் ஆர். ரெங்கராஜன்,
ஆயுள் காப்பீட்டு ஓய்வூதியர் சங்க தலைவர்
ராஜசேகரன், மதுரை மண்டல இணைச் செயலாளர் பி. ராஜமகேந்திரன், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை கைவிட்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்தி அவற்றின் வளர்ச்சியையும், சமூக பொறுப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால வணிக வளர்ச்சி பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும் போதுமான அளவில் புதிய பணி நியமங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் 1995 பொது இன்சூரன்ஸ் ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாய்ப்பை வழங்கி அவர்களின் ஓய்வு கால சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊதிய மாற்றத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும். அனைவருக்கமான ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நான்கு அரசுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரே நிறுவனமாக செயல்பட வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வி.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் 50 பெண்கள் உட்பட ஆயுள் காப்பீட்டுத் துறை மற்றும் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

