திருச்சி லால்குடியில் தமிழக ஆற்றுப் பாசன விவசாயிகள் வாடிய பயிர்களுடன், மேகதாது அணைக்கு எதிராக பிச்சைப்பாத்திரம் ஏந்தி ஆர்ப்பாட்டம் .. பேரணி
திருச்சி லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் கைகளில் பிச்சைப்பாத்திரம் (திருவோடு) ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லால்குடி சந்தைப்பேட்டை பகுதியில் துவங்கிய இந்த பேரணி, லால்குடி ரவுண்டான வரை நீண்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், போதிய தண்ணீர் இன்றி வாடிய கரும்பு, வாழை மற்றும் நெற்பயிர்களை கைகளில் ஏந்தியபடி தங்களின் வேதனையை வெளிப்படுத்தி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த பேரணிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் புரவலர் பூ.விசுவநாதன்., தலைமை தாங்கினார்.
லால்குடியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து வகையான விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை பெற்றுத்தர வேண்டும். மேகதாது அணை அணைக்கட்டும் கர்நாடகா மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் விவசாயிகள் கைகளில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

