
திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்? பொதுமக்கள் கேள்வி.
திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால், இவ்வளவு மக்கள் கூடும் சந்தையில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பொதுமக்கள் அமர்வதற்கான இடம், வெயில்–மழையிலிருந்து பாதுகாக்கும் மேற்கூரை போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சந்தைக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படத்தில் உள்ள அறிவிப்பின்படி இருசக்கர வாகனத்திற்கு ரூ.6, காருக்கு ரூ.11 என கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள்,
“வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும் போது, முறையான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பான மேற்கூரை போன்ற வசதிகளை ஏன் ஏற்படுத்தக்கூடாது? கட்டணம் வசூலிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது. சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்மலை வாரச்சந்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் 100 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவதாகும்.
சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் உடனடியாக ஆய்வு செய்து, சாலை சரிசெய்ய வேண்டும், குடிநீர், கழிப்பறை, மேற்கூரை மற்றும் முறையான வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைத்து வசதிகளையும் செய்து விட்டு, போக்குவரத்து இடையூறு இல்லாமல் ரோடுகள் அமைத்து, வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைத்து,கடைகளுக்கு உழவர் சந்தையிலுள்ள போல கட்டிடங்கள், மேற்கூரை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் அமைத்து கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் . என மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார் ,

