பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்தி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . திருச்சியில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் : நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் .
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கலந்தாய்வு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாநில தலைவர் பார்த்திபன் தலைமையிலும், மாநில செயலாளர் விஷ்ணு பிரியா முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மணி, துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோகைமலை வட்டார செயலாளர் மணிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், கடந்த 14 ஆண்டுகளில் பலமுறை தகுதி தேர்வு ஆயிரக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றும் அரசாணை 149 மூலம் தமிழ் தகுதி தேர்வோடு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தகுதியுள்ள 21,515 ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள 30,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் முதலமைச்சர் அவர்களின் 110 விதியின் கீழ் புதிய அரசாணை பிறப்பித்து பணி நியமனம் வழங்கிட வேண்டும்,
தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி மேலும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதமும் மற்றும் காலிப்பணியிடங்களை கருத்தில் கொண்டும் டிஆர்பி தேர்வாணைய மூலம் தொடக்கப்பள்ளிக்கு வைத்த அனைத்து தேர்வுகளிலும் தகுதியை நிரூபித்துள்ள 21,515 ஆசிரியர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிரந்தர பணி நியமனம் வழங்கிட வேண்டும்,
ஒவ்வொரு வகுப்பிற்கும் 1 நிரந்தர ஆசிரியர் என ஒரு பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும், கடந்த 2013 முதல் 2026 வரை ஒரு முறை மட்டுமே குறைந்த அளவில் ஆசிரியர் எண்ணிக்கை நியமனம் நடைபெற்ற நிலையில் கல்வித்தந்தை காமராஜர் கொள்கை வழியில் ஆட்சி புரியும் முதல்வர் தகுதியுள்ள 21,515 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்குவதன் மூலம் காமராஜராக முதல்வரை போற்றுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

